தொடர் மழைக்கு 6 பேர் பலி: தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு


தொடர் மழைக்கு 6 பேர் பலி: தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை - 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Dec 2019 12:15 AM GMT (Updated: 2 Dec 2019 12:15 AM GMT)

தமிழகத்தில் கொட்டி தீர்க்கும் கனமழைக்கு 6 பேர் பலியாகினர். கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது.

வட கிழக்கு பருவ மழை, கடந்த ஆண்டு ஏமாற்றியது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 28-ந் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்யத் தொடங்கி மக்கள் மனங்களை குளிர வைத்து வருகிறது.

வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தொடர் மழைக்கு வழிவகுத்தது.

கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பருவ மழை வெளுத்து கட்டுகிறது. இயல்பான மழை 44 செ.மீ. என்கிற நிலையில் 39 செ.மீ. மழை இதுவரை பெய்திருக்கிறது. தொடர் மழையால் கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அதிகன மழை பெய்யும்; ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்றும் தொடர்ந்தது. எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, மயிலாப்பூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மிதந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டனர்.

கடலூரில் நேற்று அதிகாலை கன மழை கொட்டியது. நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்றும் மழை தொடர்ந்தது.

10 ஆயிரம் வீடுகளை மழை நீர் சூழ்ந்தது. அவற்றில் வசித்தவர்கள் பத்திரமாக அப்புறப்படுத்தப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள், மக்காச்சோள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகியவற்றில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நெல்லையில் தொடர்ந்து பெய்த கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மணிமுத்தாறில் அருவி தெரியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கொக்கிரகுளத்தில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. சந்திப்பு பஸ் நிலையம், வெள்ளத்தில் மிதக்கிறது. அணைகள் வேகமாக நிரம்புகின்றன.

தென்காசி மாவட்டத்தில் குற்றாலத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் 186 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடியில் ரெயில் தண்டவாளங்கள் மழைநீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரெயில் சேவை பாதித்துள்ளது. திருச்செந்தூர் பகுதியில் மழையால் ஆலந்தலை சுனாமி நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. கயத்தாறு, ஆறுமுகநேரியில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

கன்னியாகுமரியில் மழை தொடர்வதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். இந்த மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்புகின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் மழையால் ராமேசுவரம், மண்டபம் பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. ராமேசுவரத்தில் ஒரே நாளில் 112 மி.மீ. மழை பெய்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்களின் படகுகள் மழையால் சேதம் அடைந்தன. ராமேசுவரம் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் 200 பேர் மீட்கப்பட்டு அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய, விடிய மழை பெய்தது. மதுரை மாவட்டத்தில் ஒரு வாரமாகவே மழை பெய்து வருகிறது. சில இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்து மின்தடை ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை 11 மணி வரை பலத்த மழை பெய்தது. மீண்டும் மாலை 4 மணிக்கு பின்னர் மழை தொடர்ந்தது.

தேனி மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.

திண்டுக்கல்லில் 21.2 மி.மீ., வேடசந்தூரில் 25 மி.மீ.., கொடைக்கானல் போட்கிளப் பகுதியில் 18 மி.மீ. மழை பதிவானது.

திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீடுகளும் இடிந்து பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று காலை வரை பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது. மணமேல்குடி பகுதியில் கண்மாய்களில் திறந்து விடப்பட்ட உபரி நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள், பேரிடர் மையங் களில் தங்க வைக்கப்பட்டனர்.

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்தது. கரூர் பகுதியில் நாள் முழுவதும் மழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்தது. நேற்று சாரல் மழை பெய்தது. சிறுவாணி அணை பகுதியில் 10 மி.மீ. மழை பதிவானது.

திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

ஈரோடு மாவட்டத்தில் பல இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சாரல் மழை பெய்தது. வீரகனூரில் அதிகபட்சமாக 30 மி.மீ. மழை பதிவானது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களிலும் சாரல் மழையே பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பொங்கலுக்காக சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புகள் பல இடங்களில் சாய்ந்து விட்டன. இது விவசாயிகளுக்கு வேதனையை தந்துள்ளது.

பரவலாக கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழை தொடர்பான சம்பவங் களில் 6 பேர் உயிரிழந்தனர்.

சென்னை அம்பத்தூரில் மழை நீர் கால்வாயில் விழுந்து ஷேக் அலி (வயது 46) பரிதாபமாக இறந்தார்.

நெல்லை மாவட்டம், நாங்கு னேரி அருகே குசவன்குளத்தில் கந்தசாமி (80) என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பலியானார்.

புதுக்கோட்டையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது கந்தசாமி (50) மழை நீர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம், மூன்றாம் சேதி கிராமத்தில் துரைக் கண்ணு (70) கன மழைக்கு பலியானார்.

இதே போன்று வீடு இடிந்து விழுந்ததில் திருவாரூர் மாவட்டம், பரவகோட்டையில் ரவிச்சந்திரன் (50), அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியான பூங்கோதை (50) ஆகியோரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த மழை காரணமாக காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று (திங்கட் கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Next Story