காஞ்சீபுரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் 4 புதிய மருத்துவ கல்லூரிகள் - எடப்பாடி பழனிசாமி தகவல்


காஞ்சீபுரம், கடலூர் உள்ளிட்ட இடங்களில் 4 புதிய மருத்துவ கல்லூரிகள் - எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2019 11:30 PM GMT (Updated: 2 Dec 2019 10:34 PM GMT)

காஞ்சீபுரம், கடலூர் உள்ளிட்ட 4 இடங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை,

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஆயிரத்து 224 பேருக்கான பணி நியமனம் வழங்கப்படும். நிகழ்ச்சி நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு முன்னதாக சுகாதாரத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் பார்வையிட்டார்.

அதைத்தொடர்ந்து தமிழ்நாடு தொலைதூர கண்ணியல் வலைதளம் மற்றும் 32 காணொளி கண் பரிசோதனை மைங்களை தொடங்கிவைத்து கண் பரிசோதனை செய்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், காண்பித்து சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வாழ்த்து பெற்றார்.

இதையடுத்து மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திருநங்கை அன்பு ரூபி என்ற செவிலியர் உள்பட 2 ஆயிரத்து 721 செவிலியர்கள், 1,782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத்துவ அலுவலர்கள், 524 ஆய்வக நுட்புனர்கள், 77 இயன்முறை சிகிச்சையாளர்கள் மற்றும் 24 இளநிலை உதவியாளர்கள் என மொத்தம் 5 ஆயிரத்து 224 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசியதாவது:-

சுகாதாரத்துறையில் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தற்போது செயல்பட்டு வரும் 10 அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 650 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், கடந்த 8 ஆண்டுகளில், 1,350 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மட்டும், 9 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்தில் அமைக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 900 மருத்துவ இடங்கள் தமிழகத்துக்கு கூடுதலாக கிடைத்துள்ளன.

தமிழகத்துக்கு புதிதாக 9 மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு கட்டமைப்பு ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 4 அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மிக சிறப்பாக செயல்பட்டதற்காக மத்திய அரசின் தேசிய விருதை தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில், 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 165 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 30 படுக்கை வசதி கொண்டவையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக தொடங்கப்படும் 9 மருத்துவ கல்லூரிகள் மூலம் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு முதன்மை செயலாளர் கே.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story