ஒரு தலைக்காதல்... ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபருக்கு தர்ம அடி


ஒரு தலைக்காதல்... ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபருக்கு தர்ம அடி
x
தினத்தந்தி 10 Dec 2019 12:15 PM GMT (Updated: 10 Dec 2019 12:15 PM GMT)

ஒருதலை காதலால் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய வாலிபருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த வாலிபர்  ஜெகன். இவர் அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும் போது இருந்தே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இன்று அந்த பெண்  பஸ்சில் பயணம் செய்து உள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற ஜெகன்  ஓடும் பஸ்சில் வைத்து அந்த பெண்ணுக்கு தாலி கட்டியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த  அந்தப் பெண் கூச்சலிடவே பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் ஜெகனை பிடித்து அடித்து உதைத்து வாணியம்பாடி  போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி போலீசார் ஜெகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இந்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story