ரஜினிகாந்த் 2020-ல் கட்சி தொடங்குவார்... 2021-ல் அதிசயம் அற்புதம் நிகழும் - சத்தியநாராயண ராவ்


ரஜினிகாந்த் 2020-ல் கட்சி தொடங்குவார்... 2021-ல் அதிசயம் அற்புதம் நிகழும் - சத்தியநாராயண ராவ்
x
தினத்தந்தி 11 Dec 2019 7:49 AM GMT (Updated: 11 Dec 2019 7:49 AM GMT)

2020-ல் கட்சி தொடங்குவார்... ரஜினிகாந்த் கூறிய அதிசயம் அற்புதம் நிகழும் என சகோதரர் சத்தியநாராயண ராவ் கூறி உள்ளார்.

சென்னை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தென்பெண்ணை ஆற்றின் அருகே டாக்டர் அம்பேத்கர் நகர் மற்றும் ஈபிஎஸ் நகர் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவும், துணிகளைத் துவைக்கவும் ஆற்றங்கரைக்கு சாக்கடை கால்வாய் வழியாகவே சென்று வந்தனர். 

இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தென்பெண்ணை ஆற்றின் சாக்கடை கால்வாயைப் பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் மூன்று இடங்களில் ரூ.3 லட்சம் மதிப்பில் சிறு பாலங்கள் கட்டப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 10 மணியளவில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி பாலங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் பங்கேற்று பாலங்களை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் முன்னோடியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்குச் செய்துள்ளனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி சாக்கடை கால்வாய் வழியாகச் சென்று கொண்டிருந்த மக்களுக்குப் பாலம் அமைத்துக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை மக்கள் மன்றத்தினர் செய்ய வேண்டும். 2020-ல் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார். சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்திப்பார். 2021-ல் ரஜினிகாந்த் கூறிய அதிசயம் அற்புதம் நிகழும். 2021 தேர்தலில் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராகப் போட்டியிடுவார். குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவிப்பார்" எனக் கூறினார்.

Next Story