பெரியார் பற்றி சர்ச்சை பேச்சு; நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு


பெரியார் பற்றி சர்ச்சை பேச்சு; நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு
x
தினத்தந்தி 9 March 2020 12:45 PM GMT (Updated: 9 March 2020 12:45 PM GMT)

பெரியார் பற்றி சர்ச்சையாக பேசினார் என நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்து உள்ளார்.

சென்னை, 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் சேலத்தில் 1971-ம் ஆண்டு திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் நிர்வாண நிலையில் ராமர், சீதை உருவப்படங்கள் தூக்கி செல்லப்பட்டதாக கூறினார்.

இவரது இந்த பேச்சுக்கு பல தரப்பில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. நடிகர் ரஜினிகாந்த் இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும், பொதுஅமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாகவும் பேசியதாக அவர் மீது திருவல்லிக்கேணி போலீசில் கடந்த ஜனவரி 18-ந்தேதி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால், போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஜனவரி 20-ந்தேதி புகார் செய்யப்பட்டது. இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்காததால் சென்னை எழும்பூர் 2-வது குற்றவியல் கோர்ட்டில் கடந்த 4-ந்தேதி உமாபதி வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘பொய்யான தகவலை கூறி இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்தும் விதமாக பேசிய ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸ் கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ரோஸ்லின் துரை நேற்று முன்தினம் விசாரித்தார்.

அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல்கள் கான்சியஸ் இளங்கோ ஆஜராகி, ‘மத ரீதியான அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக வெறுக்கத்தக்க கருத்துகளை கூறி, பரபரப்பை ஏற்படுத்தி அரசியல் கட்சி தொடங்கவேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினிகாந்த் பேசியுள்ளார். இப்படி தலைவர்கள் சிலர் பேசியதால்தான் டெல்லியில் மிகப்பெரிய கலவரம் நடந்துள்ளது.

ரஜினிகாந்த் பேசியதால் தமிழகத்தில் மிகப்பெரிய கலவரம் நடக்கவில்லை என்றாலும், செங்கல்பட்டில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இந்து அமைப்பினர் ராமர் படத்தை தூக்கிவந்து போராட்டம் நடத்தியுள்ளனர்’ என்று வாதிட்டார்.

மேலும் அவர், ‘வன்முறை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவ்வாறு பேசும் நபருக்கு மறுபடியும் இதுபோல பேச வாய்ப்பு அளிப்பதுபோல ஆகிவிடும்.

எனவே, ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார். இதையடுத்து, நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை இன்று பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.  இந்நிலையில் இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்து உள்ளார்.

Next Story