டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு: தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - தமிமுன் அன்சாரி வேண்டுகோள்


டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு: தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் - தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 April 2020 9:15 PM GMT (Updated: 1 April 2020 8:28 PM GMT)

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆன்மிக பணிக்காக டெல்லிக்கு சென்ற தப்லிக் ஜமாத்தினர் வெளிநாட்டவர்களால் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், அவர்களில் தமிழகம் திரும்பியவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு ஆட்பட்டு இருக்கிறார்கள். பலர் அந்தந்த ஊர் ஜமாத்தினர், குடும்பத்தினரின் ஆலோசனையின்படி, அதிகாரிகளின் வழிகாட்டலை ஏற்று மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்பட்டு இருக்கிறார்கள். 

இதையும் கடந்து யாரேனும் கவனக்குறைவாக இருந்தால், அவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைகளுக்கு தங்களை ஆட்படுத்திக்கொள்ளும்படி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். நாட்டின் சூழல், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு, தங்கள் குடும்பத்தினர் நலம் ஆகியவை இதில் அடங்கியிருக்கிறது. 

அதேவேளை டெல்லி நிகழ்வை மட்டுமே மையப்படுத்தி பிரிவினையை வளர்ப்பது நல்ல பண்பல்ல என்றும், இதை முன்னிறுத்தி ஒரு சமூகத்தையே குறிவைத்து நடக்கும் பரப்புரைகளை அனைவரும் கண்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story