தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621, பலி 6 ஆக உயர்வு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621, பலி 6 ஆக உயர்வு
x
தினத்தந்தி 6 April 2020 1:31 PM GMT (Updated: 6 April 2020 1:31 PM GMT)

தமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதுபற்றி தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, கொரோனா பாதிப்புக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 57 வயது பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.  மூச்சு திணறலால் உயிரிழந்த அவர் திருச்சி சென்று வந்தவர் என்று கண்டறியப்பட்டு உள்ளது.  இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது.

இதுவரை 19,060 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 205 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.

தமிழகத்தில் 50 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அந்த 50 பேரில் 48 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.  தொற்று வந்தவர்கள் சிகிச்சைக்கு முன்வந்தால் தான் நோயை குணப்படுத்த முடியும் என கூறினார்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story