ஆய்வகங்களை அதிகரித்து கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


ஆய்வகங்களை அதிகரித்து கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 April 2020 9:15 PM GMT (Updated: 6 April 2020 8:49 PM GMT)

ஆய்வகங்களை அதிகரித்து கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள 571 பேரில், 507 பேர் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் கூறுகிறார். ஆனால் உண்மை நிலை என்ன?

சீனாவில் கொரோனா கண்டறியப்பட்ட டிசம்பர் மாதத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி, தொழில் நிமித்தமாகச் சென்றோர் மற்றும் சுற்றுலா பயணிகள் லட்சக்கணக்கானோர் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளனர்.

தமிழ்நாட்டிலும் பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பி இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் கண்டறிந்து தமிழக அரசின் சுகாதாரத்துறை பரிசோதனை நடத்தியதா? என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டின் மொத்த 8 கோடி மக்கள் தொகையில், வெறும் 38 லட்சம் பேர் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும், வெறும் 4 ஆயிரத்து 612 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் தெரிகிறது. ரத்தப் பரிசோதனை ஆய்வகங்களை அதிகரித்து கொரோனா பரிசோதனையை முழு வீச்சுடன் செயல்படுத்தினால்தான் கொரோனா தொற்றுக்கு உள்ளான மக்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய முடியும்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Next Story