தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக உயர்வு


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக உயர்வு
x
தினத்தந்தி 8 April 2020 1:02 PM GMT (Updated: 8 April 2020 1:02 PM GMT)

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளது.  இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.  தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் 50 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  அந்த 50 பேரில் 48 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது.  இதனால் பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக இருந்தது.

இந்நிலையில், தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்பொழுது, கொரோனா பாதிப்புக்கு இதுவரை 66,431 பேர் வீட்டு கண்காணிப்பிலும், 253 பேர் அரசு கண்காணிப்பிலும் உள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 64 வயது பெண் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளார்.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 149 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  28 நாட்கள் நிறைவு செய்தவர்கள் எண்ணிக்கை 27,416 ஆக உள்ளது.

தமிழகத்தில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  69 பேரில் 63 பேர் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.  இதனால் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 621ல் இருந்து 690 ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் 11 பேர் குணமடைந்து உள்ளனர்.  இதுவரை மொத்தம் 19 பேர் வீடு திரும்பியுள்ளனர் என கூறினார்.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தமிழகத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  அவர்களில் 42 பேர் ஒரே மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் ஆவர்.  ஒருவர் மலேசியாவை சேர்ந்தவர்.  சென்னையில் 156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என கூறினார்.

தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

வீட்டு கண்காணிப்பில் 60,739 பேர், அரசு கண்காணிப்பின் கீழ் உள்ள கொரோனா வார்டுகளில் 230 பேர் உள்ளனர்.

28 நாட்கள் நிறைவு செய்தவர்கள் எண்ணிக்கை 32,075.  இதுவரை பரிசோதனை செய்தவர்கள் எண்ணிக்கை 6,095 ஆகும்.  வேலூரில் ஒருவர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 8 ஆக உள்ளது.  முகக்கவசங்கள் போதிய அளவில் உள்ளன.  72 வயது முதியவர் உள்பட 21 பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மற்றவர்கள் உடல்நிலை சீராக உள்ளது.  வீட்டில் இருங்கள்.  தேவைப்பட்டால் சிகிச்சைக்கு வாருங்கள்.  போதுமான மருத்துவ உபகரணங்கள் இருப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story