தமிழகத்தில் ஊரடங்கு மீறல்; ரூ.3.76 கோடி அபராதம் விதிப்பு


தமிழகத்தில் ஊரடங்கு மீறல்; ரூ.3.76 கோடி அபராதம் விதிப்பு
x
தினத்தந்தி 2 May 2020 8:24 AM GMT (Updated: 2 May 2020 8:24 AM GMT)

தமிழகத்தில் ஊரடங்கு மீறலில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.3.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு வரும் மே 3ந்தேதி வரை அமலில் இருக்கும்.  தமிழகத்தில் 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது.  இதனை மீறி மக்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

அத்தகைய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 86 ஆயிரத்து 509 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.  ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3 லட்சத்து 66 ஆயிரத்து 430 வழக்குகள் இதுவரை பதிவாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 25 ஆயிரத்து 851 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதுவரை ரூ.3 கோடியே 76 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை கடந்த ஏப்ரல் 16ந்தேதி முதல் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

144 தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  ஊரடங்கை மீறுபவர்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story