பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பு - தமிழக அரசு விளக்கம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பு - தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 4 May 2020 8:45 PM GMT (Updated: 4 May 2020 8:11 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆண்டுக்கு ரூ.2,500 கோடி வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

டீசல் மற்றும் பெட்ரோல் மீது மாநில வரி விதிப்பை கடந்த 3-ந்தேதி அன்று மாற்றி அமைத்ததின் காரணமாக மாநில அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி முதல் ரூ.30 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்கிற ஒரு தவறான செய்தி சில பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோல் மீதான மாநில வரியை மாற்றி அமைத்ததின் காரணத்தினால், தற்போதுள்ள நுகர்வின் அடிப்படையில், டீசல் விலை ரூ.2.50 மற்றும் பெட்ரோல் விலை ரூ.3.25 மட்டும் உயரும். எனவே, தற்போது மாநில அளவில் உள்ள பெட்ரோல், டீசல் நுகர்வின் அடிப்படையில் மாநில அரசுக்கு ஓராண்டுக்கு மொத்தமாக ரூ.2500 கோடி வரை மட்டுமே கூடுதல் வரி வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு முறை மாற்றி அமைக்கப்பட்டதினால் உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறையும் போது மாநிலத்தின் வருவாய்க்கு ஏற்படும் பாதிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படும். அதே சமயம் உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும்போது, நுகர்வோர் மீது வரி விதிப்பின் மூலம் ஏற்படும் கூடுதல் சுமையும் குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story