சென்னையை துரத்தும் கொரோனா.. என்னைக் கவலையடையச் செய்கிறது - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 6 May 2020 9:59 AM GMT (Updated: 6 May 2020 9:59 AM GMT)

சென்னையை துரத்தும் கொரோனா என்னைக் கவலையடையச் செய்கிறது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. சென்னையைப் பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து அதிக அளவில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதன்காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டை தற்காலிகமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், இந்த மார்க்கெட்டை திருமழிசைக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் திருமழிசையில் மார்க்கெட் செயல்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில்,  தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

தூரத்தில் நானிருந்தாலும் சென்னையை துரத்தும் கொரோனா என்னைக் கவலையடையச் செய்கிறது...

கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால் கட்டுக்கடங்காமல் தெருவில் இறங்குகிறீர்கள்...

அங்கேயே வீட்டில் இருங்கல் என்றால் அங்காடிக்குச்செல்கிறோம் என்கிறீர்கள்...

கடைபிடியுங்கள் கட்டுப்பாடுகளை என்றால் கடைக்குப்போகிறேன் என்று கிளம்புகிறீர்கள்...

ஊரடங்கைக்கடைபிடியுங்கள் என்றால்  ஊருக்குப்போகிறேஎன் அவசியம் என்கிறீர்கள்..

முகக்கவசம் அணியுங்கள் என்றால் மூச்சு முட்டுகிறது முடியாதென்கிறீர்கள்...

சமூக இடைவெளி வேண்டும் என்றால் சங்கடம் இடையில் இது எதற்கு என்கிறீர்கள்...

கை கழுவுங்கள் அடிக்கடி என்றால் கை கழுவுகிறீர்கள் அவ்வேண்டுகோளை?

கரோனா கேட்கிறது அடங்காமல் நீங்கள் இருந்து விட்டு அடங்கவில்லை நான் எனக்கூறுவது சரியா?

எனவே அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு... அடித்து விரட்டுவோம் கரோனாவை! - என
முடிவெடுங்கள்... முடித்துவையுங்கள்.. கொரோனாவின் விபரீத விளையாட்டை... 

என அதில் பதிவிட்டுள்ளார்.

Next Story