சென்னை மக்களுக்கு வீடு தேடி வரும் காய்கறி, பழங்கள் - தோட்டக்கலைத்துறை நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு


சென்னை மக்களுக்கு வீடு தேடி வரும் காய்கறி, பழங்கள் - தோட்டக்கலைத்துறை நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு
x
தினத்தந்தி 9 May 2020 7:30 PM GMT (Updated: 9 May 2020 7:23 PM GMT)

சென்னை மக்களுக்கு காய்கறி, பழங்கள் வீடு தேடி வருகின்றன. இதனால் தோட்டக்கலைத்துறை நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, 

கொரோனா பீதி காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு, திருமழிசையில் காய்கறி அங்காடிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் தேவையான காய்கறிபழங்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வீடு தேடி காய்கறி-பழங்கள் விற்பனை செய்யும் திட்டம், மக்களுக்கு பெரிதும் கைகொடுத்து வருகிறது.

இதற்காக செல்போனில் ‘பிளே ஸ்டோர்’ மூலம் இ.தோட்டம் ( e.thottam ) எனும் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். இந்த செயலி மூலம் தேவைப்படும் காய்கறி, பழங்களை தேர்வு செய்து, ஆன்லைனிலேயே அதற்கான கட்டணத்தை செலுத்திவிட்டால் போதும். 12 மணி நேரத்தில் இருந்து அதிகபட்சமாக 48 மணி நேரத்துக்குள் வீடு தேடி வரும்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “கத்தரி, வெண்டை, பீட்ரூட், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட், முருங்கை, எலுமிச்சை (எண்ணிக்கை 2), இஞ்சி, கோவைக்காய், சிறிய மற்றும் பெரிய வெங்காயம், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறி அடங்கிய பை (சுமார் 8 கிலோவில்) ரூ.300-க்கும், ஆப்பிள், மாதுளை, வாழை, பப்பாளி, கிர்ணி, தர்பீஸ், சாத்துக்குடி, கொய்யா உள்ளிட்ட பழங்கள் அடங்கிய பை ரூ.500-க்கும் (சுமார் 8 கிலோவில்) கிடைக்கிறது’ என்றார்.

இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Next Story