திருவள்ளூரில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி


திருவள்ளூரில் 200க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 10 May 2020 5:04 AM GMT (Updated: 10 May 2020 5:04 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்,

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.  பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளன.  தமிழகத்தில் 6 ஆயிரத்து 535 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  1,824 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.

சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  நேற்று 4 பேர் பலியான நிலையில், இன்று ஒருவர் பலியாகி உள்ளார்.  இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோன்று சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளை விற்பனை செய்ய வந்த மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலருக்கு தொற்று பரவியுள்ளது.  கோயம்பேடு சந்தைக்கு வந்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனைகளில் இது உறுதியானது.

அந்த வகையில், திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 120 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது.  இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்தது.

இதனை தொடர்ந்து திருவள்ளூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 44ல் இருந்து 110ஆக அதிகரித்தது.  தமிழக அளவில் கொரோனா பாதிப்பில் திருவள்ளூர் மாவட்டம் 3வது இடம் பிடித்து உள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதில் பெருமளவில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.  தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

Next Story