நெகட்டிவ் முடிவு வந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு; தமிழக அமைச்சர் அதிர்ச்சி தகவல்


நெகட்டிவ் முடிவு வந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு; தமிழக அமைச்சர் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 21 May 2020 4:16 PM GMT (Updated: 21 May 2020 4:16 PM GMT)

நெகட்டிவ் முடிவு வந்து வீடு திரும்பியவர்களுக்கு கொரோனா பாதிப்பு தெரிய வந்துள்ளது என தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு வருகிற 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் கூறும்பொழுது, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  நெகட்டிவ் முடிவு வந்து வீடு திரும்பியவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.  இதுபோன்று 25 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது என அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.

இது ஒரு புதிய சவாலாக உள்ளது.  அவர்களிடம் இருந்து குடும்பத்திற்கு பாதிப்பு பரவி விட கூடாது.  நாளுக்கு நாள் விமானம், ரெயில் மற்றும் இ-பாஸ் பெற்று கொண்டு பயணிப்போர் வழியே பாதிப்பு பரவும் ஆபத்து உள்ளது.  இதனால் சோதனை சாவடிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட வேண்டிய நிலை உள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய சூழல் உள்ளது.  நாட்டிலேயே தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதித்தோருக்காக அரசு சார்பில் 12 உயர்மட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, ரத்த அழுத்தம், இருதய சிகிச்சை, மகப்பேறு தாய்மார்களுக்கு, குழந்தை மருத்துவம், மனநல பாதிப்பு, டி.பி., எச்.ஐ.வி. பாதிப்பு கொண்டவர்கள் என்று குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அவர்கள் எதுபோன்ற சத்துணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.  உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Next Story