கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினர் ஜி.கே.வாசன், தொல்.திருமாவளவனுடன் பத்திரிகை அதிபர்கள் சந்திப்பு


கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினர் ஜி.கே.வாசன், தொல்.திருமாவளவனுடன் பத்திரிகை அதிபர்கள் சந்திப்பு
x

ஜி.கே.வாசன், தொல்.திருமாவளவனுடன் பத்திரிகை அதிபர்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினர்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் இல.ஆதிமூலம், தி இந்து பதிப்பக குழும இயக்குனர் என்.ராம், தினகரன் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் ஆகியோர் சந்தித்து பத்திரிகை துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கொடுத்தனர்.

அது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கை அமல்படுத்திக் கொண்டிருக்கிற இச்சூழலில் பத்திரிகை துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பத்திரிகை துறை எதிர்கொண்டு வரும் பெரும் பிரச்சினைகளில் இருந்து அதனை விடுவிக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. ஆகவே, பத்திரிகை நிறுவனங்களின் அமைப்பு அரசாங்கங்களுக்கு அளித்துள்ள நியாயமான கோரிக்கைகளான பத்திரிகைகளை அச்சிடும் செய்தித்தாள்களுக்கான சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள விளம்பர பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். பத்திரிகைகளுக்கான விளம்பர கட்டணத்தை 100 சதவீதம் உடனே உயர்த்த வேண்டும். அரசு அறிவிப்புகளை வெளியிடுவதில் அச்சு ஊடகங்களின் உபயோகத்தை அதிகரிக்க வேண்டும். அடுத்த 2 நிதியாண்டுகளுக்கு வரியில்லா விடுப்பு காலகட்டமாக அறிவிக்க வேண்டும் என்பனவற்றை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்றி பத்திரிகை துறை தொடர்ந்து லாபகரமாக இயங்கிட உதவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனையும் இதே குழுவினர் சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது, அச்சு ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடி குறித்து தெரிவித்த அவர்கள், பிரதமர் நரேந்திரமோடிக்கு இதுகுறித்து கடிதம் எழுதுமாறும் கேட்டுக் கொண்டனர். அப்போது, கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு, தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு நடந்த சிறிது நேரத்தில் அச்சு ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்தும், அதற்கு தீர்வு காணுமாறும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கோரிக்கை விடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.


Next Story