கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த திட்டத்தை உருவாக்க வேண்டும் சோனியா காந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 22 May 2020 11:45 PM GMT (Updated: 22 May 2020 8:03 PM GMT)

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சோனியாகாந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று காணொலிக் காட்சி மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒருங்கிணைந்து நமது மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவோம். நெருக்கடிகள் மிகுந்த காலக்கட்டங்களில் கூட, இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையைப் புறக்கணித்துவிடக்கூடாது. அனைத்து மாநிலங்களையும் சேர்த்து கூட்டு நடவடிக்கைக் குழு ஆரம்பத்திலேயே துவக்கப்பட்டிருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கவோ, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ அல்லது பொருளாதார நிவாரணங்களை வழங்கவோ, மத்திய அரசு எந்தவிதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மாறாக ஜனநாயக நெறிமுறைகளையும் நிலைநிறுத்தப்பட்ட கொள்கைகளையும் மீறியே மத்திய அரசு செயல்பட்டுள்ளது. அதன் காரணமாக மாநில அரசுகளுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனாலும், இன்னமும் மாநில அரசுகளுக்குத் தரப்பட வேண்டிய ஜி.எஸ். டி. பங்கை மத்திய அரசு விடுவிக்காமல் உள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், உதவிகளும் வழங்குவது; சரியான கேள்விகளைக் கேட்டு அரசைப் பொறுப்புக்குள்ளாக்குவது என எதிர்க்கட்சித் தலைவர்களாக நமக்கு இரு முக்கிய பணிகள் உள்ளது. இந்த கொரோனா வைரஸ் காலகட்டத்தில் தி.மு.க.வும், நானும் தமிழகத்தில் நிவாரண முயற்சிகள் மேற்கொள்வதில் முழுமையாக ஈடுபட்டு வருகிறோம்.

‘ஒன்றிணைவோம் வா’ என்கிற திட்டத்தின் கீழ், 25 நாட்களுக்கு முன்னதாக ‘ஹெல்ப் லைன்’ ஒன்றினை ஏற்படுத்தினோம். முறைப்படி செயல்பட வேண்டிய அரசு செயல்படாத காரணத்தால், நிவாரண உதவியை நாங்கள் செய்யும்போது, இதை எங்கள் கடமையாகவே கருதிச் செய்கிறோம். மக்களுக்கு அரசு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை எடுத்துச் சொல்லும் விதமாக ஒரு கூட்டுத் தீர்மானத்தை வடித்தெடுக்க வேண்டிய நேரம் இதுவாகும். எனவே, அரசு செய்ய வேண்டியவை குறித்து சில கோரிக்கைகளை முன்மொழியக் கடமைப்பட்டுள்ளேன்.

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான யுக்திகள் மற்றும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டம் ஒன்றை உருவாக்கிட வேண்டும். இடைக்கால முடிவெடுக்கும் முறையானது நிச்சயம் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக, வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கும், வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கும் நேரடியாகப் பொருளாதார நிவாரணம் வழங்க வேண்டும். தி.மு.க.வும், காங்கிரசும் வலியுறுத்தியபடி, தேவையில் உள்ள மக்களுக்கு நேரடியாகப் பணம் வழங்கப்பட வேண்டும்.

ஊரடங்கு தொடர்ந்து நீடிப்பதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பவர்களுக்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நாட்களை 150 ஆக உயர்த்த வேண்டும். கடந்த காலங்களில், தலைவர் கருணாநிதியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் செய்தபடி, விவசாயிகள் மற்றும் சிறு தொழில் செய்வோருக்கான கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களின் கடன்களுக்கு காலம் தாழ்த்தி திருப்பி செலுத்துவதற்கான வசதி செய்து தரப்பட வேண்டும்.

இந்த கொரோனா தொற்று பிரச்சினையைப் பொறுப்பற்ற முறையில் இந்த அரசு கையாண்ட விதத்தைக் காணும் போது நெஞ்சம் வலிக்கிறது. ஆனால், இதை நான் அப்படியே விட்டுவிட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இந்த கொடூரத்தை உண்மையிலேயே வென்று விடலாம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Next Story