சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்


சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது - கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
x
தினத்தந்தி 23 May 2020 11:18 AM GMT (Updated: 23 May 2020 11:18 AM GMT)

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களை தனிமைப்படுத்தி, அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்து வருகிறது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 569 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் போன்ற மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. இதையடுத்து சென்னையில் 758 இடங்கள் கொரோனா கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து அந்த பகுதியில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்றும் மணலி, மாதவரம், அம்பத்தூர், தண்டையார்பேட்டை, ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூர் மண்டலங்களிலும்  குறைந்து வருகிறது.

குடிசை பகுதிகளிலும் நோய்த்தொற்றை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், சவாலான பகுதிகளான ராயபுரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நோய்த்தொற்றை  கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முக கவசம் அணியும் பழக்கத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story