திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது


திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
x
தினத்தந்தி 10 Jun 2020 9:07 AM GMT (Updated: 10 Jun 2020 10:29 AM GMT)

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

சென்னை,

திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும்,,சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக கடந்த 2ம் தேதியன்று கொரோனா, மூச்சுத் திணறலுடன்  சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு ஆரம்பத்தில் 90 சதவீத ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தேவையானது 40 சதவீதமாக குறைந்தது. இதனைத்தொடர்ந்து அவரின் உடல் நிலை வெண்டிலேட்டர் உதவியில்லாமல் படிப்படியாகத் தேறி வந்தது.

இந்நிலையில் இன்று அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலைக்கிடமானது. இதனையடுத்து அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் காலை 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எம்.எல்.ஏ அன்பழகன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு ஜூன் 10 ஆம் தேதியான இன்று தான் பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனாவால் அவர் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மகாலட்சுமி தெருவில் உள்ள வீட்டில் ஜெ.அன்பழகன் உடலுக்கு உறவினர்கள், தெரு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கொரோனாவால் எம்.எல்.ஏ அன்பழகன் காலமானதால் , அவரின் உடல் மாநகராட்சி அதிகாரிகளிடமே ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து , மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச் சடங்குகளுக்கு பிறகு, சுகாதாரத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதலின் படி திமுக எம்எல்ஏ அன்பழகனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கவச உடை அணிந்தவர்கள் எம்எல்ஏவின் உடலை அடக்கம் செய்தனர். 

இதே சமயம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகன் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

Next Story