தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது: மேலும் 1,927பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது:  மேலும் 1,927பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 10 Jun 2020 1:01 PM GMT (Updated: 10 Jun 2020 1:01 PM GMT)

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு ஒரேநாளில் 1,927 பேர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பிடியில் சிக்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பும் உயருகிறது. குறிப்பாக இளம் வயதினர் உயிரையும் கொரோனா பறித்து வருவது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,

தமிழகத்தில் 1,897 பேர், பிறமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வந்த 30 பேர் என மொத்தம் 1,927 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 11-வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.

சென்னையில் மேலும் 1,392 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 8-ம் நாளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 24,531லிருந்து 25,937 ஆக அதிகரித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் 7 பேர், அரசு மருத்துவமனைகளில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 326 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 5 நாட்களில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் இன்று ஒரேநாளில் 1,008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18,325இல் இருந்து 19,333 ஆக உயர்வடைந்தது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 17,179 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை 22,828 ஆண்கள், 13,996 பெண்கள், 17 திருநங்கைகளுக்கு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 34,914-ல் இருந்து 36,841 ஆக அதிகரித்துள்ளது.


Next Story