பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல். ராகவன் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் இரங்கல்


பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல். ராகவன் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் இரங்கல்
x
தினத்தந்தி 19 Jun 2020 4:14 PM GMT (Updated: 19 Jun 2020 4:14 PM GMT)

பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல். ராகவன் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகில் பழம்பெரும் பின்னணி பாடகராக இருந்தவர் ஏ.எல். ராகவன் (வயது 87).  சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து உடனடியாக சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் கொண்டு செல்லப்பட்டார்.  எனினும், மருத்துவ சிகிச்சை பலனின்றி இன்று காலை 7.30 மணியளவில் அவர் காலமானார்.

கடந்த 1947ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் மற்றும் சுதர்சனம் ஆகிய படங்களில் நடித்து தனது திரையுலக வாழ்க்கையை ஏ.எல். ராகவன் தொடங்கினார்.  இதன்பின்னர் அவர், சி.ஆர். சுப்புராமன், கே.வி. மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, எஸ்.எம். சுப்பையா நாயுடு உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களின் இசையில், பின்னணி பாடகராக பல பாடல்களை பாடியுள்ளார்.  இது தவிர்த்து விஜயகுமாரி என்ற படத்தில் குமாரி கமலாவுக்காக சிறுமி குரலிலும் ஏ.எல். ராகவன் பாடியுள்ளார்.

அவர் தனது இசை பயணத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எண்ணற்ற பாடல்களை பாடியுள்ளார்.  அலைகள் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.  இவரது மனைவி நடிகை எம்.என். ராஜம், பல தசாப்தங்களாக பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

ஏ.எல். ராகவன் மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து வெளியிட்டு உள்ள செய்தியில், பழம்பெரும் திரையிசை பாடகரான ஏ.எல். ராகவன் அவர்களின் மறைவு தமிழ் திரைப்பட துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிக பெரிய இழப்பு என்று தெரிவித்து உள்ளார்.

Next Story