தமிழகத்தில் நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 22 Jun 2020 9:59 AM GMT (Updated: 22 Jun 2020 10:10 AM GMT)

தமிழகத்தில் நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் காலம் நிறைவடைந்தபோதும் பல பகுதிகளில் வெப்பம் தணியவில்லை.  ஏற்கனவே ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் வெப்ப தகிப்பினால் தவித்து வருகின்றனர்.  இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்தியில், தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்தமிழகம், மேற்குத்தெடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழக கடேலார மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  இதேபோன்று நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒரு சில பகுதிகளில் இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய கூடும்.  அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும் என தெரிவித்து உள்ளது.

தென்கிழக்கு வங்க கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும்.  இதனால் அந்த பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Next Story