கொரோனா ஊரடங்கு: வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் 255 பேர் சென்னை வந்தனர்


கொரோனா ஊரடங்கு: வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் 255 பேர் சென்னை வந்தனர்
x
தினத்தந்தி 22 Jun 2020 7:59 PM GMT (Updated: 22 Jun 2020 7:59 PM GMT)

வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் 255 பேர் சென்னை வந்துள்ளனர்.

சென்னை,

கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் தங்கி இருந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், சிறப்பு விமானங்களில் அவர்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்கள் மத்திய அரசின் சார்பில் சிறப்பு விமானங்களில் அழைத்து வரப்படுகின்றனர்.

அதன்படி ஜெர்மனியில் சிக்கியவர்களை அழைத்துக்கொண்டு மும்பை வழியாக சிறப்பு விமானம் சென்னை வந்தது. இந்த விமானத்தில் 5 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 90 பேர் வந்தனர். குவைத்தில் சிக்கியவர்களை அழைத்துக்கொண்டு வந்த விமானத்தில் 165 பேர் வந்தனர்.

இந்த 2 சிறப்பு விமானங்களில் வந்த 255 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை முடிந்த பின்னர் தமிழக பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பரிசோதனைக்காக சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அரசு பஸ்களில் அனைவரும் சென்னையில் உள்ள கல்லூரி மற்றும் ஓட்டல்களில் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Next Story