சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது நடந்தது என்ன? - மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்


சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது நடந்தது என்ன? - மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
x
தினத்தந்தி 30 Jun 2020 11:56 PM GMT (Updated: 30 Jun 2020 11:56 PM GMT)

சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது நடந்தது என்ன? என்பது தொடர்பாக கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை அளித்துள்ளார். அதில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்று உள்ளன.

மதுரை,

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் இறந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன், தன்னுடைய விசாரணை குறித்த அறிக்கையை மதுரை ஐகோர்ட்டு பதிவாளருக்கு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மதுரை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 28-ந்தேதி, கோர்ட்டு ஊழியர்களுடன் சாத்தான்குளம் சென்றேன். அங்குள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது, பொறுப்பு அதிகாரிகளான தூத்துக்குடி மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு குமார், துணை சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் அங்குள்ள இன்ஸ்பெக்டர் அறையில் இருந்தனர். அப்போது நான் உள்ளே நுழைந்தேன். அந்த சமயம் அவர்கள் இருவரும் எந்த வரவேற்பு அறிகுறியும் இல்லாமல் ஒருமுறை கூட முறையான வணக்கம் செலுத்தாமல் அலட்சிய மனப்பான்மையுடனும், பொறுப்பற்ற தன்மையுடனும் நின்று கொண்டு இருந்தனர்.

எவ்வித முறையான வணக்கமும் செய்யாமல் தனது உடல்பலத்தை காட்டுவதான உடல் அசைவுகளை செய்து கொண்டு இருந்தனர். ஐகோர்ட்டு இந்த வழக்கை கூர்ந்து கவனித்து வருகிறது என்ற போதிலும் மிரட்டும் தொனியிலான பார்வையுடனும், உடல் அசைவுகளுடனும் குமார் இருந்தார். பின்னர் அவர்களிடம் பொது நாட்குறிப்பேடு மற்றும் இதர பதிவேடுகளை கேட்டபோதும், அவற்றை சமர்ப்பிக்க முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை.

போலீஸ் நிலைய காவலர்களை ஒருமையில் அதட்டும் தொனியில் குமார் பேசிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தார். பின்னர் அவர்கள் வெளியில் இருக்குமாறு பணிக்கப்பட்டனர்.

நான் மதியம் 1 மணி அளவில் விசாரணையை தொடங்கினேன். சாத்தான்குளம் போலீஸ் நிலைய குற்ற எண் 312/2020 வழக்கு பொதுக்குறிப்பு சம்பந்தப்பட்ட பதிவேடுகள் மற்றும் கோப்புகள் ஆகியவற்றை நிலைய எழுத்தரை கொண்டு வருமாறு பணிக்கப்பட்டது. கொஞ்சம் தாமதமாக அவை எடுத்து வரப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தன. அதன் தொடர்புடைய புகைப்பட நகல்கள் எடுத்து, உண்மை நகல் அத்தாட்சி செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சம்பவத்தின் நேரடி சாட்சியமான, போலீஸ் நிலையத்தின் கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட பதிவுகளை பதிவிறக்கம் செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட கோர்ட்டில் இருந்து அலுவலர் சுரேஷ் வரவழைக்கப்பட்டார். மேலும் உள்ளூர் புகைப்பட நிபுணர்களையும், சி.சி.டி.வி. கேமரா பதிவிறக்கம் செய்வதற்காக உள்ளூர் நிபுணர்களையும் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் சாத்தான்குளம் தாசில்தார் ஏற்பாடு செய்திருந்தார். அவர்களும் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அலுவலர் சுரேஷ் முன்னிலையில் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவின் ஹார்டு டிஸ்க் ஆய்வு செய்யப்பட்டது. அதில் போதுமான ‘சேமிக்கும் இடம்’ (ST-O-R-A-GE SP-A-CE) இருந்த போதும் கேமராவில் பதிவாகும் காட்சிகள் நாள்தோறும் தானாகவே அழிந்து போகுமாறு அங்கிருந்த கணினியில் தயார் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் தந்தை-மகன் கைது நாளான கடந்த 19-ந் தேதி முதல் அடுத்தடுத்த நாட்களில் எந்த ஒரு வீடியோ பதிவும் போலீஸ் நிலையத்தில் இருந்த கணினியில் இல்லை. அவை அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. முக்கிய நேரடி சாட்சியமான அதன் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு அது என்னால் கைப்பற்றப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக போலீஸ் நிலைய பதிவுகளை தொடர்ந்து சரிபார்க்கும் பொருட்டு சாத்தான்குளம் தாசில்தாரை 500 ஜி.பி. திறனுடன் புதிய ஹார்டு டிஸ்க்கை உடனடியாக வாங்கி வரச்சொல்லி, அனைவரது முன்னிலையிலும் பொருத்தப்பட்டது. அதை இயக்கி சரிபார்த்து, அங்கிருந்த பொறுப்பு ஆய்வாளரிடம் தகவல் அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டு, அவற்றை முறையாக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக போலீஸ்காரர் மகாராஜா என்பவரை அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. முறையாக பல்வேறு கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக கேட்கப்பட்டபோதும், அவர் சம்பவ இடத்தில் சாட்சியாக இல்லாது இருந்தபோதும் கேள்விப்பட்ட நிகழ்வுகள் குறித்து பயத்துடன் சரிவர பதில் அளிக்க முன்வரவில்லை.

அவரது சாட்சியம் அனைத்தும் முறையாக முடிவுற்ற பின், விசாரணை நடைபெற்ற முதல் மாடியில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டார். அடுத்த சாட்சியான தலைமை காவலர் ரேவதியிடம் வாக்குமூலம் பெறும் பணி தொடங்கப்பட்டது. அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. அவர் சம்பவ இடத்து சாட்சியாக இருந்த காரணத்தினால் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் மிகவும் கவனத்துடன் நின்று நிதானமாக பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த சாட்சி மிகுந்த பயத்துடனும், உண்மைகள் அனைத்தையும் சாட்சியாக சொல்வதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும், நான் சாட்சியம் அளிப்பதை வெளியில் உள்ளவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள் என்று பயந்தார். அதன்பேரில் நீதிமன்ற ஊழியர்கள் பாதுகாப்பிற்காக வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தார்கள்.

அப்போதும் கூட போலீசார், போலீஸ் நிலையத்தின் வலது பக்கம் உள்ள வேப்ப மரத்தின் கீழ் அவ்வப்போது கூட்டமாக சேர்ந்து நீதிமன்ற ஊழியர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமலும், அவர்களை கிண்டல் செய்த காரணத்தினால் சாட்சியம் பதிவு செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு, அங்கு அசாதாரண சூழல்களை ஏற்படுத்தினர்.

சாட்சி ரேவதி, சாட்சியம் அளித்தால் தனக்கு மிரட்டல் வரும் என்று, மிகுந்த பயத்துடன் காணப்பட்டார். சாட்சியம் அளித்த போது மிகுந்த பதற்றம் அடைந்ததால் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டது. அதற்காக அவருக்கு போதுமான கால அவகாசமும் வழங்கப்பட்டது.

சாட்சியம் கூறிய வாக்குமூலத்தில், “கைதிகள் இருவரையும் அங்கிருந்த காவலர்கள் விடிய விடிய லத்தியால் அடித்ததாகவும், அதில் லத்தி மற்றும் டேபிள் ஆகிய இடங்களில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும், அதனை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும் அவற்றை உடனடியாக கைப்பற்ற வேண்டும்” என்றும் கூறினார். அவ்வாறு சாட்சியம் அளித்துக்கொண்டு இருந்த சாட்சி, “பிரிண்ட் எடுத்த பேப்பரில் கொஞ்ச நேரம் கழித்து கையெழுத்து போடுகிறேன்” என்று போலீஸ் நிலையத்தின் மேல்தளத்தில் இருந்து கீழ்தளத்திற்கு சென்றுவிட்டார்.

எனவே லத்திகளை கைப்பற்றும் பொருட்டு, அங்கிருந்த போலீஸ்காரர்களை லத்திகளை கொடுக்கும்படி கூறியும், அவர்கள் காதில் ஏதும் விழாதது போல் இருந்தார்கள். பிறகு கட்டாயப்படுத்தியதன் பேரில் அனைவரும் அவர்களது லத்தியை ஒப்படைத்துவிட்டார்கள்.

அதில், போலீஸ்காரர் மகாராஜன் என்னை பார்த்து “உன்னால ஒன்னும் புடுங்கமுடியாதுடா” என்று என் முதுகிற்கு பின்னால் என் காதில் விழும்படிபேசி, அங்கு ஒரு அசாதாரண நிலையை உருவாக்கினார். மேலும் முதலில் அவரது லத்தி சொந்த ஊரில் உள்ளது என்றார். பிறகு அவரது போலீஸ் குடியிருப்பில் உள்ளது என்றும், அனைத்து பக்கங்களிலும் நடந்து கொண்டு போதிய ஒத்துழைப்பு தரமறுத்ததாலும், வரேன், இரு என்று ஒருமையில் சொல்லியதுடன், ஒரு கட்டத்தில் தனக்கு லத்தியே இல்லை என்று கூறி நின்றுகொண்டார்.

இதனால் அவரின் மீது கை வைத்து தள்ளி அழைத்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.மேலும் அங்கிருந்த போலீஸ்காரர்களில் மற்றொருவரிடம் லத்தியை கேட்ட போது அவர் எகிறி குதித்து தப்பி ஓடிவிட்டார். இவை அனைத்தையும் அங்கிருந்த போலீஸ்காரர்கள் வீடியோ எடுத்தனர்.

சூழல் சரியில்லாத நிலையில் அங்கிருந்து கிளம்ப நேரிடும் போதும் கூட சாட்சியம் அளித்த ரேவதி, கையெழுத்திட மறுத்துவிட்டார். வெகு நேரத்திற்கு பின்னர் அவரிடம் பாதுகாப்பு குறித்து உறுதியளித்த பின்பு, அவர் வாக்குமூலத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அங்கு நிலைமை பாதுகாப்பானதாக இல்லாதபோதும், போலீசார் ஆங்காங்கே சூழ்ந்து கொண்டும் நடக்கும்நிகழ்வுகளை தனது செல்போனில் பதிவு செய்து கொண்டும் நீதிமன்ற ஊழியர்களை மிரட்டிக்கொண்டும் இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டு காலை (29-ந்தேதி) 5 மணி அளவில் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தோம். வந்த சிறிது நேரத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் மாவட்ட நீதிபதிக்கு தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்தோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story