மருத்துவர்கள் தினம்: மகத்தான பணி செய்யும் மருத்துவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் - முதலமைச்சர் பழனிசாமி


மருத்துவர்கள் தினம்: மகத்தான பணி செய்யும் மருத்துவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 1 July 2020 10:19 AM GMT (Updated: 1 July 2020 10:19 AM GMT)

நேரம் காலம் பார்க்காமல், தன்னலம் கருதாமல், ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ தின வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் தன்னலம் கருதாமல் சேவையாற்றி வரும் மருத்துவர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தற்போது உலகையே உலுக்கி வரும் வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் மருத்துவத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் தினமான இன்று நேரம் காலம் பார்க்காமல், தன்னலம் கருதாமல், ஓய்வின்றி உழைக்கும் மருத்துவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ தின வாழ்த்து கூறியுள்ளார். 

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உயிர்காக்கும் மருத்துவர்களின் கடமையை பாராட்டி அவர்களுக்கு நன்றி பாராட்டும் வகையில் டாக்டர் பிதான் சந்திர ராய் அவர்களின் பிறந்த நாளான ஜூலை மாதம் முதல் நாள் மருத்துவர்கள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவாமல் காத்திட இந்நாளில் நாடு முழுவதும் அயராது பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர்களின் பணியினை நாடே போற்றிக் கொண்டிருக்கிறது. உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை நான் இறைவனுக்கு நிகராக கருதுகின்றேன். நேரம் காலம் பார்க்காமல், தன்னலம் கருதாமல், ஓய்வின்றி உழைக்கக் கூடியவர்கள் நம்முடைய மருத்துவர்கள். இந்த பேரிடர் நோய்த் தொற்று காலத்தில், கடமை தவறாமல் கண்ணியத்துடனும், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வரும் மருத்துவர்களின் தியாகத்திற்கு நிகர் ஏதுமில்லை. மருத்துவர்களின் நலனில் அக்கறை கொண்ட மாண்புமிகு அம்மாவின் அரசு மகத்தான பணி செய்து வரும் மருத்துவர்களுக்கு எப்போதுமே துணை நிற்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் வாழ்வு சிறக்கட்டும் என இத்தருணத்தில் வாழ்த்துவதோடு, இந்த நன்னாளில் மருத்துவர்களை நாம் நினைவு கூர்ந்து வாழ்த்தி, அவர்களுடைய பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story