சாத்தான்குளம் விவகாரம்: திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக அரசை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக குற்றச்சாட்டு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை


சாத்தான்குளம் விவகாரம்: திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக அரசை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக குற்றச்சாட்டு - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை
x
தினத்தந்தி 3 July 2020 3:12 PM GMT (Updated: 3 July 2020 3:12 PM GMT)

சாத்தான்குளம் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக அரசை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தூத்துக்குடி சிபிசிஜடி அலுவலகத்தில் காவலர் மகாராஜன் ஆஜரானர். அவரிடம் சிபிசிஜடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை நீதிபதியான பாரதிதாசனை காவலர் மகாராஜன் ஒருமையில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தொடர்ந்து தமிழக அரசை தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்கட்ட விசாரணை, சாட்சி சேகரித்தல், ஆதாரம் திரட்டுதல் முடிந்து குற்றவாளி உறுதி செய்யப்படுகின்றனர். இந்த குற்றவியல் சட்ட நடைமுறை சாத்தான்குளம் விவகாரத்திலும் பின்பற்றப்படுகிறது.  சாத்தான்குளம் விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மேலும் அரசு, விசாரணை அமைப்புகளின் மீது பழி போட்டு  மலிவான அரசியலை செய்கிறது திமுக. போலீசாரின் நடவடிக்கைகள் மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் ஸ்டாலின் என்றும் நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் உள்ள வழக்கில் அவதூறு விதைக்க கூடாது. முதலமைச்சர் எடப்பாடியின் நல்லாட்சியை நரி சூழ்ச்சிகளால் களங்கப்படுத்த முடியாது.  இவ்வாறு தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் கூறியுள்ளார்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story