நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு


நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 5 July 2020 12:00 AM GMT (Updated: 4 July 2020 9:42 PM GMT)

தமிழகம் முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்றுவர ‘இ-பாஸ்’ கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து முழு ஊரடங்கு உத்தரவினை அரசு அறிவித்தது. இந்த முழு ஊரடங்கு உத்தரவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) வரை அமலில் உள்ளது.

மேற்காணும் பகுதிகளில் 6-ந்தேதி (நாளை) முதல் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்படவும் அனுமதித்து கடந்த 30-ந்தேதி நாளிட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசாணை (நிலை) எண் 324 வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், பணியாளர்கள் மாவட்டங்கள் இடையே பணிக்குச் சென்றுவர ‘இ-பாஸ்’ அவசியம். மாவட்டத்திற்குள் பணிக்குச் சென்றுவர ‘இ-பாஸ்’ அவசியமில்லை. இந்நிலையில், கடந்த 19-ந்தேதிக்கு முன்னர் மாவட்ட கலெக்டர்களால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மாவட்டங்கள் இடையே சென்று வருவதற்கான ‘இ-பாஸ்’ மற்றும் இதர பாஸ்களை தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

எனவே, 6-ந்தேதிக்கு (நாளை) பின்னர் மாவட்டங்கள் இடையேயான போக்குவரத்திற்கு புதிதாக ‘இ-பாஸ்’ மற்றும் இதர பாஸ்கள் பெற அவசியமில்லை. இதுவரை ‘இபாஸ்’, இதரபாஸ்கள் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின்படி விண்ணப்பம் செய்து அதனைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story