சமூக பரவலாக மாறவில்லை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி


சமூக பரவலாக மாறவில்லை தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 8 July 2020 12:15 AM GMT (Updated: 7 July 2020 8:49 PM GMT)

தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என்றும், ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பு இருக்காது என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னை கிண்டி, கிங்ஸ் நோய்த் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.136 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை கொரோனா தொற்று காரணமாக அரசு கொரோனா மருத்துவமனையாக 750 படுக்கைகளுடன் அதிநவீன சிறப்பு மருத்துவ உபகரண வசதிகளுடன் போர்க்கால அடிப்படையில் இரண்டே வாரத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக 4 தளங்களுடன், அதிநவீன மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ள இக்கொரோனா மருத்துவமனை, மருத்துவ ஆக்ஸிஜனுடன் கூடிய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சைக்காக 60 படுக்கைகள் மற்றும் 40 எண்ணிக்கையிலான சிறப்பு அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் அமைந்துள்ள அதிநவீன உபகரணங்களுடன் இம்மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் 100 மருத்துவர்கள், 90 செவிலியர்கள் மற்றும் 100 மருத்துவம் சாரா பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த அரசு கொரோனா மருத்துவமனையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

எவ்வித காலதாமதமும் இல்லாமல், உயிரிழப்பு ஏற்படாதவண்ணம் உடனடி சிகிச்சை அளிப்பதற்காக இந்த பிரத்யேக கொரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 595, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 9,073 என மொத்தம் 31 ஆயிரத்து 668 படுக்கைகள் உள்ளன. சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 7,815, தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை 5,749 மொத்தம் 13 ஆயிரத்து 564 படுக்கைகள் உள்ளன.

மருத்துவ உபகரணங்களை தேவையான அளவிற்கு கொள்முதல் செய்கிறோம். சிறப்பு மருந்துகளுக்கான ஏற்பாடுகள் அரசால் செய்யப்பட்டுள்ளன. கொரோனா தொற்று உள்ளவர்களை சிறந்த முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும், மருந்துகளும் அரசிடம் இருக்கின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையைப் பொறுத்தவரை ஊரடங்கின் காரணமாக படிப்படியாக தொற்றுநோய் குறைகிறது. அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- மற்ற மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாவது போல் தோன்றுகிறதே?

பதில்:- நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை மக்கள் எந்த அளவிற்கு பின்பற்றுகிறார்களோ, அந்த அளவுக்கு இந்த நோய்ப் பரவலை குறைக்க முடியும்.

கேள்வி:- சமூகப் பரவல் வந்துவிட்டதா?

பதில்:- நான் ஏற்கனவே பலமுறை சமூகப் பரவல் இல்லை என்று தெரிவித்து விட்டேன். நாமெல்லாம் இப்படி இருக்கின்ற இடத்தில் நோய் பரவினால் தான் சமூகப் பரவல். எங்கும் இல்லாத அளவிற்கு தமிழக அரசு, சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை இணைந்து செயல்பட்டதன் விளைவாக நோய் பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. நோய்ப் பரவல் குறைக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- ஊரடங்கு பலனளித்தும் சென்னையில் ஏன் ஊரடங்கு நீட்டிக்கப்படவில்லை?

பதில்:- வாழ்வாதாரம் என்பது மிகப் பெரிய சவால். ஒரு பக்கம் நோய்ப்பரவலை தடுக்க வேண்டும், அதே வேளையில் வாழ்வாதாரத்தையும் மக்களுக்கு கொடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை. அதனால், முழுக்க முழுக்க ஊரடங்கையே பிறப்பித்துக் கொண்டிருந்தால், சுமார் 105 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

இதையே தொடர்ந்து மேற்கொண்டால், வாழ்வாதாரத்தில் பாதிப்பு மற்றும் பொருளாதாரத்தில் சுணக்கம் ஏற்பட்டு விடும். எனவே முடிந்த அளவிற்கு ஊரடங்கின் மூலமாக நோய் பரவலைத் தடுத்து மக்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்க வேண்டுமென்ற நிலையில்தான் அரசாங்கம் இந்த முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

இந்த ஊரடங்கின் மூலமாக பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் சென்னை, மதுரை மக்களும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் இந்த நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு, ஊரடங்கு காலத்தில் முழு ஒத்துழைப்பு நல்கியதற்கு அனைத்து மக்களுக்கும் மனமார, உளமார பாராட்டுக்கள், நன்றி கூறுகிறேன்.

கேள்வி:- மீண்டும் ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பு உண்டா?

பதில்:- அப்படி வருவதற்கு வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். இது முழுக்க முழுக்க மக்களுடைய கையில் தான் இருக்கிறது. மக்கள் அரசினுடைய வழிகாட்டுதல்களை கடைபிடித்தால், இந்தப் பரவல் நிச்சயமாக குறையும். மக்கள் விழிப்போடு இருந்தால், அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் இந்த நோய்ப் பரவல் படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பொதுமக்களுடைய முழு ஒத்துழைப்பு மிகமிக முக்கியம்.

கேள்வி:- ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுவது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

பதில்:- அவருடைய ஆட்சிக் காலத்தில் புயல், வெள்ளம் வந்தது, எவ்வளவு கொடுத்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். அரசாங்கத்தின் நிதிநிலைக்கு ஏற்றவாறு அரசு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தேவையான பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கி கொண்டிருக்கிறோம். மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு அரசின் மூலமாக பல்வேறு சலுகைகள் வழங்கிக் கொண்டு இருக்கிறோம்.

கேள்வி:- கொரோனா காற்றின் மூலமாக பரவுகிறதா?

பதில்:- அதுபற்றி இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. மருத்துவ நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், கண்டுபிடித்து, அதையும் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டால், அதையும் கடைபிடித்து நோய் பரவலை தடுப்பதுதான் அரசினுடைய முதன்மையான கடமை.

இந்தியாவிலேயே ஒரு சிறந்த மருத்துவமனையாக நாங்கள் இதை கருதுகிறோம். மக்கள் உயிர் தான் முக்கியம். அந்த உயிரை காப்பதற்கு அரசு முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நோய் பரவலை தடுப்பதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களை ஈடுபடுத்திக் கொண்டு சேவை செய்யக்கூடிய அரும்பணியில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனை பேருக்கும் அரசின் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

Next Story