கிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் கலெக்டர்கள் மூலம் டெண்டர் விடுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்


கிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் கலெக்டர்கள் மூலம் டெண்டர் விடுவதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 9 July 2020 10:15 PM GMT (Updated: 9 July 2020 8:28 PM GMT)

கிராமப்புறங்களில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்துக்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கலெக்டர்கள் மூலம் டெண்டர் விடக்கூடாது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிராமப்புறங்களில் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்காமல், மாவட்ட கலெக்டர்கள் மூலம் டெண்டர் விடும் அ.தி.மு.க. அரசின் முடிவிற்குத் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் குழாய் மூலம் 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் குடிநீர் வழங்க வேண்டும் என்ற ‘ஜல் சக்தி மிஷன்‘ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 35 மாவட்டங்களுக்கு ஊரடங்கு நேரத்தில் கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி ரூ.2,264.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் இந்தத் திட்டத்திற்கான நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்குத்தான் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் டெண்டர் ‘கமிஷனை‘ மொத்தமாக ஒரே இடத்தில் வசூல் செய்வதற்காக மாவட்ட கலெக்டர்கள் மூலம் டெண்டர் விட வேண்டும் என்று நினைப்பது ‘பஞ்சாயத்து ராஜ் திட்டத்தின்‘ அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டதாகும்.

இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன், ஜூலை 6-ந்தேதியன்று அவசர அவசரமாக ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி, ‘வருகிற 15-ந்தேதிக்குள் இதற்கான மாவட்ட அளவிலான செயல் திட்டங்களைக் கொடுக்க வேண்டும், 31-ந்தேதிக்குள் டெண்டர்களை விட்டு விட வேண்டும், சில பணிகளை 31-ந்தேதிக்குள் முடித்து பில் தொகையைக் கேட்டுப் பெற வேண்டும், என்று அவசரமான வழிகாட்டுதல்களை வழங்குவது எதனால்?

குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களைச் சார்ந்தது. ஊராட்சி மன்றங்களில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் மாவட்ட அளவில் டெண்டர் விட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைக் குறைத்து, ஊராட்சி மன்றத் தலைவர்களின் பொறுப்புகளைக் கேலிக்கூத்தாக்கும் செயலில் ஈடுபடுவது நியாயமா?.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு, இத்திட்டத்தின் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், துறையின் அரசு செயலாளரும் ஏன், மாவட்ட கலெக்டர்களும் கூட ஒத்துழைப்பு வழங்குவது அதிர்ச்சி அளிக்கிறது.

ஆகவே 19 லட்சத்து 74 ஆயிரத்து 985 வீடுகளுக்கு, குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் ஜல் சக்தி திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.2,264.74 கோடியை ஊராட்சி மன்றங்களுக்கு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி ஒதுக்கீடு செய்யத் தவறினால் தி.மு.க., இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story