ராணுவ வீரரின் தாய், மனைவி அடித்துக்கொலை - நகையுடன் தப்பிய கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு


ராணுவ வீரரின் தாய், மனைவி அடித்துக்கொலை - நகையுடன் தப்பிய கொள்ளை கும்பலுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 July 2020 11:00 PM GMT (Updated: 14 July 2020 10:34 PM GMT)

ராணுவ வீரரின் தாய் மற்றும் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றுவிட்டு, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 65). இவர் முன்னாள் ராணுவ வீரர். அவருடைய மனைவி ராஜகுமாரி (60). இவர்களுக்கு 2 மகன்கள்.

மூத்த மகன் ஸ்டீபன் (38), 2-வது மகன் ஜேம்ஸ்ராஜ். இவர்களும் தற்போது ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். ஸ்டீபன் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய மனைவி சினேகா (30). இவர்களுக்கு சோயல்லா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.

சினேகாவின் பெற்றோர் வீடு சென்னை எம்.கே.வி நகரில் உள்ளது. கணவர் ராணுவத்தில் இருப்பதால் சினேகா குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். பூர்வீக ஊரான இளையான்குடி அருகே கோட்டையூர் கிராமத்துக்கு வந்து ஒரு மாதமாக அங்கு தங்கினார்

இந்தநிலையில் சினேகா தனது மாமியாருடன் வசிக்க முடுக்கூரணி கிராமத்துக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைக்குழந்தையுடன் வந்தார். நேற்று முன்தினம் இரவு சினேகா, அவருடைய குழந்தை மற்றும் மாமியார் ராஜகுமாரி ஆகியோர் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.

மாமனார் சந்தியாகு, தோட்டத்துக்கு இரவு காவல் பணிக்கு சென்றிருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அவர்களது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் ராஜகுமாரியையும், சினேகாவையும் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவத்தில், குழந்தை மட்டும் உயிர் தப்பியது.

பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 40 பவுன் நகை மற்றும் ராஜகுமாரி அணிந்து இருந்த 8 பவுன் நகை, சினேகா அணிந்து இருந்த 7 பவுன் நகை, தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் குழந்தையின் காலில் இருந்த கொலுசு ஆகியவற்றை அந்த மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது தான், இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story