கிராம அளவில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றை தடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


கிராம அளவில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றை தடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 July 2020 11:00 PM GMT (Updated: 15 July 2020 8:41 PM GMT)

கிராம அளவில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றை தடுக்கவேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்த ஆலோசனையை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் கிராமப்புறங்களிலும் படுவேகமாக பரவி சென்னையிலும் தொடருவது குறித்தும், இதை தடுத்து, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான சிகிச்சை அளிப்பது தொடர்பாகவும் மருத்துவ வல்லுனர்களுடன் நடத்திய காணொலிக்காட்சி கலந்துரையாடலின் போது, அவர்கள் தெரிவித்த ஆலோசனைகள் தமிழக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், பின்வரும் அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களை பொதுவானவையாகக்கொண்டு தமிழக கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலைக்கு ஏற்ப அரசே நோய்த் தடுப்பு சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான, செயல்முறைக்கேற்ற முடிவுகளை எடுக்கவேண்டும்.

நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையிலும், சமூகப் பரவல் இல்லை என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பது, மக்களுக்கு விபரீதத்தை உணர்த்த தவறும் ஆபத்தான போக்கு. ஆகவே சமூக பரவல் குறித்து முறைப்படி ஆய்வு மேற்கொள்ள தனியாக ஒரு வல்லுநர் குழுவை நியமித்து அறிக்கை பெற்று உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

சென்னையில் நோய்ப்பாதிப்பு குறைந்து வருவதற்கான காரணங்களில் ஒன்று மக்களிடையே ஏற்பட்டுள்ள சுய எதிர்ப்பு சக்தி. ஊரடங்கினால் தொற்றின் பாதிப்பு விகிதத்தை தள்ளிப்போட முடியுமே தவிர முற்றிலுமாக ஒழிக்க முடியாது என்பதை அரசு உணரவேண்டும். ஆகவே அதற்கு ஏற்றாற்போல், தொலைநோக்கு சிந்தனையோடு கொரோனா மருத்துவக் கொள்கை ஒன்றை வகுத்துச்செயல்படுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் நோய்ப்பரவலை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்தவேண்டும்.

அச்சத்தை போக்கவேண்டும்

* கொரோனா மருத்துவ கழிவுகளை சரியான முறையில் பாதுகாப்புடன் அகற்றி, அறிவியல் ரீதியாக அவற்றை அழித்து, மக்களின் அச்சத்தை போக்கவேண்டும். பாதுகாப்பற்ற முறையில் அகற்றுவதையும் அழிப்பதையும் முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

* முககவசம் அணிதல், பொது இடங்களில் எச்சில் துப்புவதை தவிர்த்தல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முற்றிலும் புதிய வாழ்க்கை நடைமுறைக்கு மக்கள் தங்களை படிப்படியாக தயார்செய்து கொண்டுவருவது வரவேற்கத்தக்கது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, காசநோய் போன்ற நோயை அறவே தமிழகத்திலிருந்து போக்கிட ஆக்கபூர்வமான செயல்திட்டத்தை உருவாக்கவேண்டும்.

* கொரோனா நோய் தவிர, பிற நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை. ஆகவே பிற நோய் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தடையின்றி சிகிச்சை பெற ஒரு பிரத்யேக செயல் திட்டம் உருவாக்கி, அதை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நிறைவேற்றவேண்டும்.

தமிழகத்தில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக இருப்பதால், அரசின் ஆக்கபூர்வமான செயல்திட்டம் மற்றும் ஊக்கமளித்தல் மட்டுமே இதுபோன்ற கொரோனா நோய் பேரிடர் காலத்தில் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.

ஆகவே கிராம அளவில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்றை உடனடியாக தடுத்து நிறுத்திடவும், கொரோனா தவிர பிற நோயால் பாதிக்கப்படுவோரின் தடையில்லாத சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளை அரசு மருத்துவமனைகளில் செய்யவும் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story