90 ஆம்புலன்சுகள் உள்பட 118 புதிய மருத்துவ ஊர்திகள் சேவை எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்


90 ஆம்புலன்சுகள் உள்பட 118 புதிய மருத்துவ ஊர்திகள் சேவை எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 1 Sep 2020 12:30 AM GMT (Updated: 1 Sep 2020 12:30 AM GMT)

தமிழகமெங்கும் 90 ஆம்புலன்சுகள் உள்பட 118 புதிய மருத்துவ ஊர்திகளின் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

108 அவசரகால ஊர்தி சேவை திட்டத்தில் தற்போது 1,005 அவசரகால ஊர்திகள் இயங்கி வருகின்றன. இந்த சேவைகள் மூலமாக இதுவரை 1 கோடியே 20 ஆயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

முதல்-அமைச்சர் கடந்த மார்ச் 24-ந் தேதியன்று சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களுக்கு அவசர காலங்களில் உயிர்காப்பதில் சிறப்பாக சேவையாற்றி வரும் 108 அவசரகால ஊர்தி சேவையை மேலும் வலுப்படுத்துவதற்காக, நடப்பாண்டில் 500 புதிய அவசரகால ஊர்திகள் ரூ.125 கோடி செலவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் கீழ், 108 அவசரகால ஊர்தி சேவைக்காக உயிர்காக்கும் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்ட 90 புதிய அவசரகால ஊர்திகள்; ரத்ததான முகாம்களில் சேகரிக்கப்படும் ரத்தத்தை, அரசு ரத்த வங்கிகளுக்கு எடுத்துச் சென்று சேமிக்கும் வகையில் 10 அரசு மருத்துவமனைகளில் உள்ள அரசு ரத்த வங்கிகளின் பயன்பாட்டிற்காக குளிர்சாதன வசதியுடன் கூடிய அதிநவீன 10 ரத்ததான ஊர்திகள்;

ஜி எண்டர்டெய்ன்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 45 அவசரகால ஊர்திகள் வழங்க இசைவளித்து, முதற்கட்டமாக வழங்கியுள்ள 18 அவசரகால ஊர்திகள் என மொத்தம் 118 ஊர்திகளின் சேவையை முதல்-அமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். நாட்டிலேயே முதல் முறையாக 108 அவசரகால ஊர்தியின் பெண் ஓட்டுநராக நியமிக்கப்பட்ட எம்.வீரலட்சுமி, ஒரு ஊர்தியை இயக்கினார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையில் காலியாக உள்ள 138 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 7 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தேசிய தர உறுதித் திட்டத்தின் கீழ் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் அரசு மருத்துவமனைகளுக்கு, மத்திய அரசு பரிசுத் தொகையும், தேசிய தரச் சான்றிதழும் வழங்கி பாராட்டி வருகிறது.

அந்த வகையில், மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய தர உறுதித் திட்டத்தில் 2019-2020-ம் ஆண்டிற்கு, காஞ்சீபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அரசு மருத்துவமனை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனை, தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனை ஆகிய 13 அரசு மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேசிய தர சான்றிதழ்களுடன் பரிசுத் தொகையாக ரூ.2.53 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக வழங்கப்பட்ட தேசிய தரச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலைகளை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவ அலுவலர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story