சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு


சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கம்: பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு
x
தினத்தந்தி 5 Sep 2020 11:45 PM GMT (Updated: 5 Sep 2020 10:48 PM GMT)

சென்னையில் நாளை முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, மெட்ரோ ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று ஆய்வு நடத்தினார்.

சென்னை,

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில், கடந்த மார்ச் 22-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மெட்ரோ ரெயில் சேவை நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதற்காக சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையதில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத் ஆய்வு செய்தார். அப்போது, மெட்ரோ ரெயில் நிலையத்தில் ‘லிப்ட்’ எந்திரத்தை காலால் அழுத்தி திறக்கும் புதிய நடைமுறையை செயல்படுத்தி ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, பணமில்லா பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ‘கியூ.ஆர்.’ கோடு நடைமுறையை ஆய்வு செய்தார். மேலும், புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள ‘ஸ்மார்ட் அட்டை ரீடர்’ கருவி மூலம் பயணச்சீட்டு எடுப்பது குறித்தும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, சைதாப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து, ரெயில் பெட்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆய்வு பணி மற்றும் ஆலோசனையின் போது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பிரதீப் யாதவ், ஆலோசகர் (இயக்கம்) ராமசுப்பு, மேலாளர்கள் சரவணன், கிருபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக, அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22-ந்தேதி முதல் மெட்ரோ ரெயில்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 7-ந்தேதி (நாளை) முதல் மீண்டும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக ‘ஸ்மார்ட் கார்டு’ மற்றும் ‘கியூ.ஆர். கோடு’ மூலம் டிக்கெட் எடுக்கும் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயில் நிலையங்கள், ரெயில்களில் 2 படிநிலைகளில் காற்று முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு 100 சதவீதம் சுத்தமான காற்று அளிக்கப்படுகிறது. புற ஊதா கதிர்கள் மூலமாகவும் காற்று சுத்திகரிக்கப்படுகிறது. சோடியம் ஹைபோகுளோரைட் திரவம் மூலம் ஏ.சி.எந்திரங்கள் வாரம் ஒருமுறை தூய்மை படுத்தப்படுகின்றன.

மேலும், 24 முதல் 30 டிகிரி வெப்பநிலையில் மெட்ரோ ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில்கள் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை ரெயில் இயக்கத்திற்கு பின்னரும் கிருமிநாசினி கொண்டு ரெயில் பெட்டிகள் சுத்தம் செய்யப்படுகின்றன. இதனால், 100 சதவீதம் பாதுகாப்புடன் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஐ.டி.நிறுவன ஊழியர்கள் உள்பட அனைத்து வகையான ஊழியர்கள், வியாபாரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

7-ந்தேதி முதல் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான நீலநிற வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். 9-ந்தேதி முதல் சென்னை சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு பச்சைநிற வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story