சிறப்பு ரெயில்: முதியோர் கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது - திமுக எம்.பி கனிமொழி


சிறப்பு ரெயில்: முதியோர் கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது - திமுக எம்.பி கனிமொழி
x
தினத்தந்தி 10 Sep 2020 5:19 AM GMT (Updated: 10 Sep 2020 5:19 AM GMT)

சிறப்பு ரெயில்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழகம் முழுவதும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயிலில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 40 விழுக்காடும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 விழுக்காடும் அனைத்து விரைவு ரயில்களிலும் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் 50-75 விழுக்காடு வரை கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. 

தற்போது சிறப்பு ரயில்களில் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டண சலுகை ரத்து செய்யப் பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது.  இந்த ரெயில்வே துறை அறிவிப்பால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது. 

பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில் முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை என்று திமுக எம்.பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.

Next Story