அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை விரைந்து முடிக்க வேண்டும் - கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை விரைந்து முடிக்க வேண்டும் என்று கல்லூரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் உள்ள 109 அரசு கல்லூரிகளில் உள்ள சுமார் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சான்றிதழ் பதிவேற்றம் செய்தனர்.
அவர்களுக்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கியது. முதல் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், அதன்பிறகு பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. முதற்கட்ட மாணவர் சேர்க்கை கடந்த 4-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், சுமார் 53 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தன.
இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக்கல்வி இயக்ககம் வெளியிட்டு இருக்கிறது. அதில், ‘மாணவர்கள் சேர்க்கையை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும், முதற்கட்ட மாணவர் சேர்க்கையில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கும், 2-ம் கட்ட மாணவர் சேர்க்கையில் வாய்ப்பு வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு அது கிடைக்காத பட்சத்தில், அவர்களுக்கு தகுதியுள்ள பிற பாடப்பிரிவுகளில் அவர்களின் விருப்பத்துடன் விதிமுறைகளை பின்பற்றி சேர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story