தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா உச்சத்தை தொடும்; தலைமை செயலாளர் எச்சரிக்கை


தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா உச்சத்தை தொடும்; தலைமை செயலாளர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Sep 2020 10:56 PM GMT (Updated: 10 Sep 2020 10:56 PM GMT)

கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:-

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் ஒரேயொரு சட்டமன்ற கூட்டத் தொடரில்தான் பங்கேற்க முடியும்.

இந்த இடைத்தேர்தலால் அரசின் பெரும்பான்மை மாறாது. கொரோனா தொற்று காலகட்டத்தில் இடைத்தேர்தல் தேவையற்றது. இதுபற்றி ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழக அரசு அதிகமாக கடன் வாங்குவதற்கு கடன் சுமைதான் காரணம். மக்களிடம் வாங்கும் சக்தி குறைவாக இருப்பதால், அரசு செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது.

எனவே கடன் அதிகமாக வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயம் இந்தநிலை மாறும்.

பி.எம். கேர் திட்டம் மூலமாக மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன. தேசிய பேரிடர் திட்டத்தின் கீழ் ரூ.510 கோடியும், தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.512 கோடியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம் பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அச்சம் இருக்கிறது. தற்போதுள்ள தொற்று எண்ணிக்கையைக் கொண்டு கணித்தால் அதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடத்தி இருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடத்த வாய்ப்பு உள்ளது.  இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

Next Story