கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து வரும் 21-ந் தேதி கன்னியாகுமாரி மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு


கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து வரும் 21-ந் தேதி கன்னியாகுமாரி மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு
x
தினத்தந்தி 11 Sep 2020 4:25 PM GMT (Updated: 11 Sep 2020 4:25 PM GMT)

கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து வரும் 21-ந் தேதி கன்னியாகுமாரி மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் பாதிப்பு குறைந்ததாக இல்லை. அதனால் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். 

இதுவரை கிட்டத்தட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு சென்ற முதல்வர் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, அம்மாவட்டங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கும் நிதி அளித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு, வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரிக்கு  வருகை தருகிறார். முதலமைச்சர் வருகையொட்டி மாவட்டத்தில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

நாகர்கோவில் துணை சூப்பிரண்டு வேணுகோபால், நாகர்கோவில் மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாஸ்கரன், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் தாணப்பன், நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் ஆகியோர் நேற்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மார்க்கமாக நாகர்கோவில் வந்தால் ஒழுகினசேரி பாலத்தில் இருந்து எந்த பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும்? கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வந்தால் அவர் செல்லக்கூடிய பாதையில் உள்ள சாலைகள் சரியாக இருக்கிறதா? எந்தெந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்? என்பது குறித்து அவர்கள் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். எனவே நாகர்கோவில் நகரில் சாலைகளை சீரமைக்கும் பணி ஒன்றிரண்டு நாட்களில் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story