சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்தது


சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்தது
x
தினத்தந்தி 13 Sep 2020 3:02 AM GMT (Updated: 13 Sep 2020 3:02 AM GMT)

சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றால் சென்னை மாநகராட்சி பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரத்து 593 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 772 பேர் (91 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பலனின்றி இதுவரை 2,942 பேர் (2 சதவீதம்) உயிரிழந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோர்எண்ணிக்கை 10,879 ஆக, அதாவது 7 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள் ளது.

இதுவரை 11 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தினமும் 12 ஆயிரம் பேருக்கு மேல் பரிசோதனைசெய்யப்படுகிறது. தினமும் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் 1,000-க்கும் குறைவாக உள்ளது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதிகள் எண்ணிக்கையும் 11 ஆக குறைந்துள்ளது.

தற்போது கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு 12-ம் தேதி (நேற்று) நிலவரப்படி அதிகபட்சமாக 1,171பேர் சிகிச்சையில் உள்ளனர். அடுத்தபடியாக அண்ணா நகர் மண்டலத்தில் 1,084 பேர், வளசரவாக்கம் மண்டலத்தில் 931 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா தொற்று குறைவாக உள்ள மண்டலமாக மணலி உள்ளது. அங்கு 140 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

Next Story