பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் - அமைச்சர் ஜெயக்குமார்


பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 16 Sep 2020 7:49 AM GMT (Updated: 16 Sep 2020 7:49 AM GMT)

பிக்பாஸ் போல கொரோனா தொற்றுக்கு பயந்து 100 நாட்கள் உள்ளே இருந்தார் கமல்ஹாசன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை,

ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று  சென்னை, கிண்டி ஹால்டா அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தமிழக அரசு தவறிவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,

தமிழகத்தில் கொரோன தொற்றுப் பரவல் ஆரம்பித்து, கிட்டத்தட்ட 150 நாட்களாகிவிட்டன. 'பிக் பாஸ்' வீட்டில் 100 நாட்கள் உள்ளே இருந்துவிட்டு வெளியே வருபவர்களுக்குப் பரிசுப் பணம் வழங்கப்படும். 150 நாட்களுக்கு மேலாக நாங்கள் உயிரைப் பணயம் வைத்து மக்களைச் சந்தித்து களப்பணியாற்றுகிறோம். ஆனால், அவர் என்றைக்காவது வெளியில் வந்தாரா? 'பிக் பாஸ்' போல வீட்டுக்குள் இருந்தபடி கமல்ஹாசன் அரசை விமர்சனம் செய்கிறார்" என்றார்.

மேலும், 17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக, கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்குக் கொண்டு வராமல் துரோகம் இழைத்துவிட்டது.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Next Story