சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Sep 2020 10:04 PM GMT (Updated: 16 Sep 2020 10:04 PM GMT)

சென்னை கீழ்ப்பாக்கத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை, 

சென்னை கீழ்ப்பாக்கம், புல்லாபுரம் புதிய போலீஸ் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (வயது 58). இவர் பீர்க்கன்காரணை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி உடல் நிலை சரி இல்லாததால் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நரசிம்மமூர்த்தி, அயப்பாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டில் கடந்த சில நாட்களாக தங்கி இருந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை அயப்பாக்கத்தில் இருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு நரசிம்மமூர்த்தி வந்துள்ளார். பின்னர் தனது மகளுக்கு செல்போனில் தொடர்புகொண்டு, ‘என்னால் தாங்க முடியவில்லை நான் சாகப்போகிறேன்’ என கூறி தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நரசிம்மமூர்த்தியின் மகள் உடனடியாக கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது நரசிம்மமூர்த்தி வேட்டியால் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மமூர்த்தியின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story