உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி


உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 18 Sep 2020 6:48 AM GMT (Updated: 18 Sep 2020 6:48 AM GMT)

உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

சென்னை,

சத்யபாமா கல்லூரியின் 29-வது பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி கூறியதாவது:-

உயர்கல்வி சேர்க்கையில் இந்தியாவில் தமிழகம் தான் முதலிடம். மாணவர்கள் குறைந்த செலவில் தரமான கல்வி பெறுவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டில், உயர்கல்வி வழங்கும் கல்வி நிலையங்களின் தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

அறிவுசார் சமுதாயம் அமைய அனைவருக்கும் கல்வி அவசியம். எனவே, அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளையும், விலையில்லாப் பொருள்களையும் வழங்கி வருகிறது.

தமிழகத்தில் ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்கும் சூழலை உருவாக்கி உள்ளோம். 4 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு கல்லூரிகளுக்கு உட்கட்டமைப்புக்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உயர்கல்வியில் சேரும் மாணவ, மாணவிகளின் விகிதம் தமிழகத்தில் 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. கொரோனா பொதுமுடக்கக் காலத்தில் தமிழகத்தில் தான் அதிகளவில் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

Next Story