தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது


தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 19 Sep 2020 11:45 PM GMT (Updated: 19 Sep 2020 10:58 PM GMT)

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா தொற்று 10 ஆயிரத்தை தாண்டியது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 83 ஆயிரத்து 215 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,351 ஆண்கள், 2,218 பெண்கள் என மொத்தம் 5,569 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 18 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 115 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 640 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 987 பேரும், கோவையில் 565 பேரும், செங்கல்பட்டில் 293, கடலூரில் 289 பேரும், சேலத்தில் 286 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 26 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை61 லட்சத்து 88 ஆயிரத்து 583 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 5 லட்சத்து 36 ஆயிரத்து 477 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 290 ஆண்களும், 2 லட்சத்து 13 ஆயிரத்து 157 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 30 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 22 ஆயிரத்து 563 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 69 ஆயிரத்து 651 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 36 பேரும், தனியார் மருத்துவமனையில் 30 பேரும் என 66 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 8 பேரும், சேலத்தில் 6 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், கோவை, காஞ்சீபுரம், வேலூரில் தலா 4 பேரும், நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், கடலூர், நாமக்கல், தஞ்சாவூர், திருப்பத்தூர், நெல்லை, திருச்சி, விழுப்புரத்தில் தலா 2 பேரும், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூரில் தலா ஒருவரும் என 24 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரையில் 8,685 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 5 ஆயிரத்து 525 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 963 பேரும், கோவையில் 308 பேரும், கடலூரில் 306 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 4 லட்சத்து 81 ஆயிரத்து 273 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 46 ஆயிரத்து 453 பேர் உள்ளனர்.

தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 924 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 922 பேரும், ரெயில் மூலம் வந்த 428 பேரும், சாலை மார்க்கமாக வந்த 4 ஆயிரத்து 204 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 550 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story