சசிகலாவின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகள் முடக்கம் - வருமானவரித்துறை நடவடிக்கை


சசிகலாவின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துகள் முடக்கம் - வருமானவரித்துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2020 12:00 AM GMT (Updated: 7 Oct 2020 9:16 PM GMT)

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சிறுதாவூர் நிலம் மற்றும் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துகளை பினாமி சட்டத்தின்கீழ் வருமானவரித்துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு தனி நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு, 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன்பே, ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் 4 ஆண்டு சிறை தண்டனை காலம், 2021-ம் ஆண்டு ஜனவரியில் முடிகிறது.

இந்தநிலையில் சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட 187 இடங்களில், 2017-ம் ஆண்டு, வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 5 நாட்கள் நடந்த சோதனையில், சசிகலா குடும்பத்தினர் 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு சொத்துகளில் சில ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்தது தொடர்பான ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி, போலி நிறுவனங்கள், சொத்துகள் விவரங்களை, வருமானவரி அதிகாரிகள் முழுமையாக கண்டுபிடித்தனர். தொடர்ந்து, ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துகளை, கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில், வருமான வரித்துறை முடக்கியது.

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு எதிரே உள்ள 10 கிரவுண்டு இடம் சசிகலாவுக்கு சொந்தம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த இடம் உள்பட தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 65 சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.300 கோடி. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கி உள்ளனர்.

இதுகுறித்து, வருமானவரி துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சசிகலா மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் வீடுகளில், கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போது, ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களின் பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டு, சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, சிறுதாவூர் நிலம் 150 ஏக்கர் மற்றும் கொடநாடு எஸ்டேட் 955 ஏக்கர் என மொத்தம் 1,105 ஏக்கர் நிலங்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இதில், கொடநாடு எஸ்டேட்டின் மதிப்பு ரூ.1,500 கோடி மற்றும் சிறுதாவூர் நிலத்தின் மதிப்பு ரூ.500 கோடியாகவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. அதனால், இந்த சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன. இதற்கான நோட்டீஸ், அந்த சொத்துகளின் நுழைவுவாசல்களில் வருமானவரித்துறையால் ஒட்டப்பட்டுள்ளது. முடக்கப்பட்டுள்ள சொத்துகள் விவரம் குறித்து பத்திரப்பதிவு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் இந்த சொத்துகளை விலை பேச முடியாது. இந்த சொத்துகளின் உரிமையாளர்களான சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் சொத்துகள் முடக்கப்பட்டது குறித்து வருமானவரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story