ரேஷனில் பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை- தமிழக அரசு உத்தரவு


படம்:The Hindu
x
படம்:The Hindu
தினத்தந்தி 10 Oct 2020 1:56 AM GMT (Updated: 10 Oct 2020 1:56 AM GMT)

பயோ மெட்ரிக் கருவி சரிவர செய்யாததால் ரேஷனில் பொருட்கள் வாங்க கைரேகை அவசியம் இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.

சென்னை:

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயோ மெட்ரிக் கருவி சரிவர செய்யாததால் ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாமல் குடும்ப அட்டைதாரர்கள் திண்டாடினர். இந்நிலையில், கைரேகை அவசியம் இல்லை என  தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. 
 
இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில், ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் நாடு முழுவதும்  அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, 2 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரத்து 864  ரேஷன் கார்டுதாரர்களுக்கு 34 ஆயிரத்து 773 ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்கள் நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தை அமல்படுத்த வசதியாக அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயின்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக, பயோ மெட்ரிக் எனப்படும்  கைவிரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தவர்கள், கைரேகை  வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல இடங்களில் கைரேகை பதிவு மிஷின் சர்வருடன் இணைப்பு கிடைக்காததால்  சரியாக வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் திண்டாடினர். குடும்பத்தில் ஒருவரின்  கைரேகை பதிவு ஒத்துவரவில்லை என்றால், வீட்டில் உள்ள வேறு யாரையாவது கூட்டி வாருங்கள் என்று கடை ஊழியர்கள் திருப்பி அனுப்பி  விட்டனர். இதனால் நேரம் வீணாவதுடன், பொதுமக்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். இதுபற்றிய புகார் தமிழகம் முழுவதும் எழுந்தது.

இந்நிலையில், அனைத்து கூட்டுறவு, மண்டல இணை பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் நேற்று முன்தினம்  திடீரென ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், “கைவிரல் ரேகையை அங்கீகரிக்க முடியவில்லை என்ற காரணத்துக்காக யாருக்கும் பொருட்கள்  வழங்காமல் இருந்துவிடக் கூடாது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த வழிமுறைகளை பின்பற்றி பொருட்கள் வழங்க வேண்டும்” என்று அரசு  அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில், “ரேஷன் பொருட்கள் வழங்க கைவிரல் ரேகை அங்கீகாரம் முதல் நிலையாகும். அடுத்து ஸ்கேன் முறையில் தரலாம். அது  முடியாதபட்சத்தில், ஆதார் (ஓடிபி) முறை, ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் முறை, ரேஷன் அட்டைதாரரின் பதிவு செய்த செல்போனுக்கு ஓடிபி  அனுப்பும் முறை, மின்னணு ரேஷன் அட்டையை (ஸ்மார்ட் கார்டு) ஸ்கேன் செய்யும் முறை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றி பொருட்கள்  வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, “மத்திய அரசு சர்வர் மூலம்தான் தற்போது அறிவித்துள்ள பயோமெட்ரிக் முறை  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆதார் லிங்க் கிடைக்க காலதாமதம் ஆகிறது. இதனால், பயோமெட்ரிக் நடைமுறையை முழுமையாக  கடைபிடிக்க இன்னும் சில நாட்கள் ஆகும். தற்போதுள்ள நடைமுறையில் உள்ள குழப்பங்களால் ஒருவருக்கு பொருட்கள் வழங்க 15 நிமிடம் ஆகிறது.  பொதுமக்கள் ரேஷன் கடையில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படுகிறது. ஆனாலும்,  பயோமெட்ரிக் நடைமுறையை ரேஷன் கடை ஊழியர்கள் வரவேற்கிறோம். அதேநேரம், கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரிகள் பயோமெட்ரிக்  நடைமுறையில் விருப்பம் இல்லாமல் உள்ளனர்” என்றனர்.

தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கைரேகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் முறை தேவையில்லாதது.  இதன்மூலம் எளிதில் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story