அனைத்து வகையிலும் தோல்வியடைந்த முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


அனைத்து வகையிலும் தோல்வியடைந்த முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Oct 2020 4:25 PM GMT (Updated: 10 Oct 2020 4:25 PM GMT)

கொரோனா பரவலைத்தடுப்பதிலும், மக்களின் வாழ்வாதாரத்தைக்காப்பதிலும் முதலமைச்சர் பழனிசாமி முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா மரணங்கள் 10000–ஐத் தாண்டி விட்டது. கொரோனா நோயால் 24,000 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் தமிழகம்!

மாநிலத்தின் கடன் ரூ. 4.56 லட்சம் கோடியைத் தாண்டி விட்டது. கொரோனாவின் கொடூரமான பிடியில் சிக்கி - தொழில் முதலீடுகள் இன்றியும் - வருமானத்தை இழந்தும் - வேலைவாய்ப்புகள் இல்லாமலும் தடுமாறி - தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள்!

இப்படி அனைத்து வகையிலும் தோல்வியடைந்த முதலமைச்சர் திரு. பழனிசாமி, நாட்டின் முக்கிய முதலீட்டு மையமாகத் தமிழகம் மாறியிருப்பதாக மக்கள் காதில் பூ சுற்றுகிறார்.

அ.தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள், இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் ஊழலின் சுரங்கமாக இருக்கும் கொரோனா கொள்முதல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? என பதிவிட்டுள்ளார்.

Next Story