முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது-அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி


முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது-அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2020 7:49 PM GMT (Updated: 16 Oct 2020 7:49 PM GMT)

முத்தையா முரளிதரன் வாழக்கை திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

பூந்தமல்லி, 

முத்தையா முரளிதரன் வாழக்கை திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, பூத் வாரியாக நிர்வாகிகள் நியமனம் குறித்தும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்தும் திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட செயலாளரும், அம்பத்தூர் எம்.எல்.ஏ.வுமான அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் பாண்டியராஜன், வேடசத்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது :-

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த தொலைநோக்கு பார்வை திட்டத்தின் கீழ் 217 திட்டங்களில் 150 திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதில் 56 திட்டங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

என்ன செய்துள்ளோம் என்பதை சொல்லி ஓட்டு கேட்க செல்வோம். அடுத்து என்ன செய்ய உள்ளோம் என்பதையும் கண்டிப்பாக கூறுவோம். சொல்லாத விஷயங்களை அதிகமாக செய்ததால்தான் அ.தி.மு.க.வுக்கு 2-வது வாய்ப்பை மக்கள் கொடுத்தனர்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் அடையாளமே தமிழ் எதிர்ப்பு அடையாளமாக உருவகப்படுத்தப்பட்டுவிட்டது. அவரும் அதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்தார். அவரைப்போற்றி படமே எடுக்க கூடாது என்பது எனது கருத்து.

தமிழ் எதிர்ப்பாளர் என்ற பெயர் பெற்ற ஒருவர், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம் நடிகர் கமல்ஹாசன் தி.மு.க. கூட்டணிக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறதே? என நிருபர்கள் கேட்டதற்கு, அவர் வந்த பின்னர் பார்த்து கொள்ளலாம் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Next Story