இலங்கை கடற்படையினர் அத்துமீறல்: துப்பாக்கியை காட்டி மிரட்டி ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு


இலங்கை கடற்படையினர் அத்துமீறல்: துப்பாக்கியை காட்டி மிரட்டி ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2020 8:55 PM GMT (Updated: 18 Oct 2020 8:55 PM GMT)

இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்தனர்.

ராமேசுவரம், 

ராமேசுவரம் பகுதியில் ஏற்பட்ட தொடர் சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த ஒரு வாரமாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றம் குறைந்ததை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு பிறகு ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி மிரட்டி ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து கடலில் வீசி எறிந்துள்ளனர். இதனால் வழக்கத்தைவிட மிகவும் குறைவான மீன்களுடன் நேற்று காலை மீனவர்கள் கரை திரும்பினர். பாம்பன் தெற்குவாடி பகுதியில் இருந்து நேற்று சுமார் 80 விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர்.

Next Story