சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை


சென்னை, புறநகர் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை
x
தினத்தந்தி 22 Oct 2020 11:47 PM GMT (Updated: 22 Oct 2020 11:47 PM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று வெளுத்து வாங்கிய மழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

சென்னை,

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அதனோடு சேர்ந்த வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வந்தது. நேற்று முன்தினம் சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் ‘சுளர்’ என்று அடித்தது. மழைக்கான சாத்தியம் கொஞ்சம் கூட இல்லாத நிலையில் காணப்பட்டது. ஆனால் பிற்பகல் அப்படியே சீதோஷ்ண நிலை மாறி, கருமேகங்கள் சூழ்ந்து ரம்மியமான சூழல் நிலவியது. பிற்பகல் 3 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு 3.40 மணியளவில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கியது.

வேப்பேரி, எழும்பூர், பாரிமுனை, தியாகராயநகர், அண்ணாநகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, வடபழனி, கிண்டி, ஆலந்தூர், திருவான்மியூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பரங்கிமலை, கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்பட பல இடங்களில் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது. சில இடங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது. அதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், மாதவரம், செங்குன்றம், புழல் உள்பட பல இடங்களில் மழை பொழிந்தது.

சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் அனைத்து சாலைகளிலும் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதை பார்க்க முடிந்தது. சில தாழ்வான இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். சென்னையில் சாலைகள், தாழ்வான பகுதிகளில் குளம்போல் கிடந்த மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் நீரகற்றும் எந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் மழையில் நனைந்தபடி ஈடுபட்டனர்.

திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நனைந்தபடி சாலைகளில் பயணித்தனர். கருமேகங்கள் சூழ்ந்து இருந்ததால் பகல் நேரம் இரவு போல காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் தேங்கியதால், சில வாகனங்களில் பழுது ஏற்பட்டது. குறிப்பாக ஆட்டோக்கள், இருசக்கர வாகனங் களில் சென்றவர்கள் வாகன பழுதால் மழையில் நனைந்தபடி தள்ளிக்கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது. மாலை 4.45 மணிக்கு பிறகு கனமழை குறைந்து, லேசான சாரல் மழை பெய்தது.

மழைவிட்டதும் பல இடங்களில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றன. இதனால் மாலையில் பணிமுடிந்து வீடு திரும்பியவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். மழையால் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 1, 2, 3 மற்றும் 4-வது ரெயில் வழித்தடங்களில் தண்ணீர் தேங்கியது. அதனையும் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தனர். அதேபோல், நகரின் தாழ்வான பகுதிகளில் இருந்த பெட்ரோல் பங்குகளில் மழைநீர் சூழ்ந்து குளம்போல் காட்சியளித்தது.

Next Story