சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை
x
தினத்தந்தி 29 Oct 2020 12:06 AM GMT (Updated: 29 Oct 2020 12:06 AM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சென்னை,

தமிழகத்தின் ஆண்டு மழைப்பொழிவில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிகளவு மழை கிடைக்கும். இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 44 செ.மீ. மழை அளவு பதிவாகும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழையை தமிழகம் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்த்து காத்து இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 3-வது வாரமோ அல்லது மாத இறுதியிலோ வடகிழக்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அதன்படி, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு பருவமழை 28-ந் தேதி (நேற்று) இந்திய பகுதிகளில் இருந்து விலகி தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் இந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. அடுத்து வரும் 2 நாட்களுக்கு இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையை பொறுத்தவரையில் நெல்லை, விருதுநகர், தென்காசியில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நகரின் ஒரு சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

Next Story