தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 9 Nov 2020 12:47 AM GMT (Updated: 9 Nov 2020 12:47 AM GMT)

தூத்துக்குடி, விருதுநகர் உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று முன்தினம் சிறிது நேரம் மழை, சிறிது நேரம் வெயில் என வானிலை கண்ணாமூச்சி ஆடியது. ஆனால் நேற்று நகரின் ஒரு சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்தது.

இந்தநிலையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு 

அடுத்த 72 மணி நேரத்தில் (நாளை மறுதினம்) கிழக்கு திசை காற்றில் நிலவும் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.


Next Story